ஆட்டிசத்திற்கான உலகளாவிய விழிப்புணர்வு தின விழா 2026
எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் இயங்கும் எஸ்.ஆர்.எம். ஆக்குபேஷனல் தெரபி கல்லூரி, 2026 ஆம் ஆண்டிற்கான உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினத்தை “ஆட்டிசம் மற்றும் மனிதநேயம் – ஒவ்வொரு உயிரும் மதிப்பு மிக்கது” என்ற மையக்கருத்தைக் கொண்டு சிறப்பாக கொண்டாடியது.
சமூக சேவைக்கான தனது தொடர் பங்களிப்பின் ஒரு பகுதியாக, எஸ்.ஆர்.எம். ஆக்குபேஷனல் தெரபி கல்லூரி, எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் குழந்தைகள் நல மருத்துவப் பிரிவுடன் இணைந்து, ஆட்டிசத்திற்கான சிறப்பு சிகிச்சை மையத்தில் “குழந்தைகளுக்கான உடல்நலப் பரிசோதனை” திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.
மேலும், பல் பரிசோதனை முகாம், தன்முனைப்பின்மை நிலையுள்ள குழந்தைகளின் பெற்றோர்களுக்கான ஆதரவுக் குழு கூட்டம் மற்றும் பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய ஒரு ‘ஆட்டிசம் விழிப்புணர்வு நிகழ்வையும்’ எஸ்.ஆர்.எம். ஆக்குபேஷனல் தெரபி கல்லூரி நடத்தியது. குழந்தைகளின் தனித்துவமான திறன்களைக் கண்டறிந்து வெளிப்படுத்துவதற்காக பல போட்டிகளும் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற குழந்தைகளின் தனிப்பட்ட திறன்கள் அங்கீகரிக்கப்பட்டன.
ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வு, புரிதல் மற்றும் தன்முனைப்பின்மை நிலையுள்ள நபர்களை உள்ளடக்கிய சமுதாயத்தை உருவாக்குதல் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மருத்துவ வல்லுநர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி உரையாற்றிய எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் டீன் டாக்டர் ஆர். ஜெயந்தி, ஆட்டிசம் குறித்த சமூகத்தின் பார்வையை மாற்ற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். “ஆட்டிசம் என்பது ஒரு குறைபாடல்ல; அது பல்வேறு பரிமாணங்களைக் கொண்ட ஒரு நிலை” என்று கூறிய அவர், அவர்களை மனமுவந்து ஏற்றுக் கொள்ளுதல்,ஆரம்பக் கட்டத்திலேயே, இந்நிலையைக் கண்டறிந்து அவர்களுக்குப் சிறப்பு பயிற்சி அளித்தல் மற்றும் ஒவ்வொருவருக்கும் பொருத்தமான தனிப்பட்ட கவனிப்பு மற்றும் அணுகுமுறைக்கான தேவையையும் அவர் வலியுறுத்தினார்.
சிறப்பு விருந்தினரான NIEPMD-ன் முதுநிலை நிபுணர் டாக்டர் J. விஜயலட்சுமி, ஆட்டிசம் உள்ள குழந்தைகளின் வளர்ச்சியில் தகவல் தொடர்புத் திறனின் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டினார். சிறந்த தகவல் பரிமாற்றத்தை ஏற்படுத்துவதே முதன்மை நோக்கமாக இருக்க வேண்டும் என்றும், இது அவர்கள் தன்னிச்சையாகச் செயல்படுவதற்கும், சமூகத்தோடு ஒன்றிணைவதற்கும் அடிப்படை அம்சம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சென்னையைச் சேர்ந்த பெபிள்ஸ் தெரபி மையத்தின் இயக்குநரும், இக்கல்லூரியின் முன்னாள் மாணவியுமான திருமதி. கீதா சுரேந்த்ராஜ், நடைமுறைக்குச் சாத்தியமான மற்றும் கனிவான அணுகுமுறையும், பயிற்சியும் சிறந்த பலனளிக்கும் என்று குறிப்பிட்டார். ஆட்டிசம் உள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிக்கத் தொடர்ச்சியான முயற்சிகள், பொறுமை, சகிப்புத்தன்மை மற்றும் அர்த்தமுள்ள ஈடுபாடு ஆகியவை முக்கியம் என்று கூறிய அவர், குழந்தைகளின் சிறிய அளவிலான முன்னேற்றங்களைக்கூட பெற்றோர்களும், நிபுணர்களும் அங்கீகரித்துப் பாராட்ட வேண்டும் என்று பெற்றோர்களை கேட்டுக்கொண்டார்.
எஸ்.ஆர்.எம். ஆக்குபேஷனல் தெரபி கல்லூரியின் டீன் டாக்டர் யு. கணபதி சங்கர், தனது உரையில் கூறியதாவது: “ஆட்டிசம் நிலை உள்ள குழந்தைகளுக்கு ஆதரவளிப்பதில் பெற்றோர்கள் ஆற்ற வேண்டிய முக்கியப் பங்கை வலுவாக சுட்டிக்காட்டினார். மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டுதலோடு பெற்றோரின் தீவிர ஈடுபாடும், கனிவான அணுகுமுறையும் இணையும் போது, குழந்தைகளின் வளர்ச்சியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும் என்றும், இது அவர்களின் அன்றாடச் செயல்பாட்டுத் திறனையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்த உதவும் என்றும் அவர் தெளிவாக எடுத்துரைத்தார்.
ஆட்டிசம் (தன்முனைப்பின்மை) உள்ளவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, தொடர்ச்சியான விழிப்புணர்வு, ஒத்துழைப்பு மிக்க கனிவானபராமரிப்பு மற்றும் அனைவரையும் அரவணைத்து உள்ளடக்கும் அணுகுமுறைகள் ஆகியவற்றை வலுவாக முன்னிலைப்படுத்திய இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது.
