எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம், சமூக நலன் மற்றும் நோய்தடுப்பு பராமரிப்பை வலுப்படுத்த மரபியல் மருத்துவ மையம் தொடக்கம்
எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சமூக நலன் மற்றும் நோய்தடுப்பு சுகாதார சேவைகளை வலுப்படுத்தும் நோக்கில் புதிய மரபியல் மருத்துவ ஆலோசனை மையத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த மரபியல் மருத்துவ மையம் எஸ்.ஆர்.எம். மருத்துவமனை ‘C’ கட்டிடம் (அறை எண்: CG 41), மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவ புறநோயாளிகள் பிரிவு அருகில், மார்ச் 27 அன்று தொடங்கப்பட்டது.
இந்த மையம் மரபியல் மதிப்பீடு மற்றும் ஆலோசனைகளை ஒருங்கிணைந்த முறையில் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கிய சேவைகளில் நோயாளியின் உடல் அமைப்பு அடிப்படையிலான மருத்துவ மதிப்பீடு, தகுந்த மரபியல் பரிசோதனைகள் தேர்வு, ஆய்வு முடிவுகளின் மருத்துவ விளக்கம் மற்றும் பரிசோதனைக்கு முன் மற்றும் பிந்தைய முழுமையான மரபியல் ஆலோசனை ஆகியவை அடங்கும்.
மருத்துவமனையின் ஒருங்கிணைந்த சிகிச்சை நடைமுறையின் கீழ், நோயாளி மதிப்பீடு மற்றும் அறிவுறுத்தப்பட்ட ஒப்புதல் பெற்ற பின், மாதிரிகள் மேம்பட்ட உயிர் அறிவியலுக்கான டிபிடி தளம் (DBT Platform for Advanced Life Sciences) மூலம் நிறமூலம் (Chromosome) ஆய்வு, மரபணு அமில (DNA) பரிசோதனை மற்றும் மரபணு வரிசை அமைப்பு ஆய்வு மேற்கொள்ளப்படுகின்றன. பின்னர் முடிவுகள் மீண்டும் மையத்திற்கு அனுப்பப்பட்டு, நோயாளிகளுக்கு தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் வெளிப்புற ஆய்வகங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் நீக்கப்பட்டுள்ளது.
மரபியல் ஆலோசனை சேவைகள் திங்கள் முதல் சனி வரை காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை வழங்கப்படும். கர்ப்பகால பரிசோதனை, குழந்தைகளின் வளர்ச்சி குறைபாடுகள் மற்றும் மரபுரீதியான புற்றுநோய் அபாய மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக நோயாளிகள் இந்த மையத்திற்குத் துறைகளிலிருந்து பரிந்துரைக்கப்படுகின்றனர்.
இந்த மையம் முன்னணி அறிவியல் நிபுணர் மற்றும் பயிற்சி பெற்ற மரபியல் ஆலோசகர்கள் கொண்ட பல்துறை குழுவால் ஆதரிக்கப்படுகிறது. இது அறிவியல் துல்லியத்தையும் நோயாளி மையப்படுத்தப்பட்ட அணுகுமுறையையும் உறுதிசெய்கிறது.
மேலும், இந்த மையம் எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் உயிரியல் பொறியியல் பள்ளியுடன் (School of Bioengineering) இணைந்து செயல்படுகிறது. இதன் மூலம் மேம்பட்ட ஆய்வக வசதிகள் மற்றும் மருத்துவ நிபுணத்துவம் ஒருங்கிணைக்கப்படுகின்றன.
இந்த முயற்சி, தடுப்பு மற்றும் துல்லிய சிகிச்சை சேவைகளை மேம்படுத்தும் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மரபியல் நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து, சரியான சிகிச்சை முடிவுகளை எடுக்க உதவுவதன் மூலம் நோயாளிகளின் உடல்நல முன்னேற்றத்தை உயர்த்துவதே இதன் நோக்கமாகும்.
ஒரே இடத்தில் மதிப்பீடு, பரிசோதனை மற்றும் விளக்க சேவைகள் வழங்கப்படுவதன் மூலம் காத்திருப்பு நேரம் குறைவு, செலவு சுமை குறைவு மற்றும் நோயாளிகளின் மனஅழுத்தம் குறைவு ஏற்படும். மேலும் வெளிப்புற ஆய்வகங்களின் மீதான சார்பும் குறைக்கப்படுகிறது.
இந்த மரபியல் மருத்துவ ஆலோசனை மையத்தின் துவக்கம், தமிழ்நாட்டில் மருத்துவ மரபியல் துறையில் எஸ்.ஆர்.எம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் ஒரு முன்னணி மையமாக உருவெடுக்கும் முக்கிய முன்னேற்றமாகும்.
